தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் (511)

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை (512)

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு (513)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று (515)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் (516)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல் (518)

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு (519)

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு (520)