கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு (281)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (282)

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும் (283)

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284)

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் (285)

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் (286)

களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் (287)

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு (288)

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர் (289)

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு (290)